சங்க இலக்கியம்

எட்டுத்தொகையும் பத்துப்பாட்டும் கொண்ட சங்க இலக்கியம் நமக்குக் கிடைத்த மூத்த இலக்கியம்.  இது தேன் சொட்டும் இலக்கியச் சுவை மிகுந்த பெருங்கடல்.  மிகக் குறைந்த சொற்கள் மூலம் மிகுந்த விவரங்களைக் கூறும் இலக்கியம். இதன் மிகுதியான பாடல்கள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டவை.  பண்டைய அறிஞர்கள் இந்த இலக்கியத்தைச் ‘சான்றோர் செய்யுள்’ என்றனர்.  இந்த இலக்கியம் ஈடு இணையில்லாத சிறப்பை உடையது.  தமிழர்களின் வரலாற்றை நாம் சங்க இலக்கியத்தின் மூலம் அறியலாம்.  தமிழகத்தை ஆண்ட சேர மன்னர்கள், பாண்டிய மன்னர்கள், சோழ மன்னர்கள், குறுநில மன்னர்கள் ஆகியவர்கள் பற்றின பாடல்கள் உள்ளன.  இது இயற்கை இலக்கியமும் ஆகும்.  தமிழகத்தில் உள்ள பறவைகள், விலங்குகள், பூச்சிகள், நீரில்  வாழும் உயிரினங்கள், மரங்கள், செடிகள், கொடிகள், மலைகள், ஆறுகள் யாவற்றையும் நாம் பாடல்களில் காணலாம். இது காதல் இலக்கியமும் ஆகும்.  சங்க இலக்கியத்தில் முக்கால் பங்கு பாடல்கள் அகப் பாடல்கள்.  மறம், இரக்கம், காதல், நட்பு, குறும்பு, சினம், மகிழ்ச்சி, வருத்தம் முதலிய உணர்வுகளை நாம் சங்கப் பாடல்களில் காணலாம். 

சங்க இலக்கியத்தை நாம் கற்றால் திருக்குறள், தேவாரம், திருவாசகம், திவ்யப்பிரபந்தம், ஐம்பெருங்காப்பியங்கள் மற்றும் பிற இலக்கியங்களைப் படிப்பது எளிதாக இருக்கும். சங்க இலக்கியத்தில் உள்ள கதைகள், காட்சிகள், உவமைகள், எண்ணங்கள், சொற்றொடர்கள் ஆகிய பலவும் பின்வந்த தமிழ் இலக்கியங்களில் காணப்படுகின்றன. “இந்தப் பாடல்கள் தமிழர்களின் மிகுந்த அறிவுத் திறனுக்கு மட்டும் சான்றில்லை. 2000ம் ஆண்டுக் கால இலக்கிய முயற்சியில் அவர்கள் இவற்றை விடச் சிறப்பாக வேறு எதையும் படைக்கவில்லை” என்று தமிழ் இலக்கியத்தின் மீது ஆழ்ந்த பற்றுக் கொண்ட அறிஞர் ஏ. கே. ராமானுஜன் சங்கப் பாடல்களைப் பற்றி எழுதியுள்ளார். மிகச் சிறப்பான நூல்கள் பலவற்றைத் தமிழ்ப் புலவர்கள் படைத்துள்ளனர். ஆனால் அனைத்து இலக்கியப் படைப்புக்களிலும் சிறப்பானதாகவும், முன்னோடியாகவும் விளங்குவது சங்க இலக்கியம் என்பதை அறிகின்றோம்.

சங்க இலக்கியத்தில் நம் தமிழ்க் கலாச்சாரத்தின் அடித்தளத்தைக் காணலாம். அதை அறிந்து கொள்ளச் சங்க இலக்கியத்தைத் தமிழர்கள் யாவரும் கற்க வேண்டும். பல மொழிகளில் புலமைப் பெற்ற அறிஞர் ஏ. கே. ராமானுஜன் தன்னுடைய நூல் ஒன்றில் எழுதியுள்ளார், “ஒருவரின் பாரம்பரியம் அவருடைய பிறப்புரிமை அல்ல.  அதை முயன்று, ஈட்டி, மீண்டும் உடைமையாக்கிக் கொள்ள வேண்டும்”. 

செக்கோஸ்லோவாக்கிய நாட்டைச் சார்ந்த தமிழ் மற்றும் சமஸ்கிருத அறிஞர் கமில் ஸ்வெல்லபில், சங்க இலக்கியம் பற்றி எழுதியுள்ளார், “தமிழரின் முதல் இலக்கியம் தனித்தன்மை உடையது.  அது இந்திய நாட்டில் உள்ள மற்ற இலக்கியங்கள் எதிலும் இல்லாத பல அரிய தன்மைகள் கொண்டது என்பதால் மட்டுமே இல்லாமல், அதன் இலக்கிய மேன்மையினாலும் தான், அதன் 26,350 அடிகள் தமிழ்மொழியை உலகத்தின் மிக உயர்ந்த செம்மொழிகளில் ஒன்றாக உயர்த்தி உள்ளன. 

சங்கப் பாடல்களின் காலம்:   பல ஆயிரம் ஆண்டுகளாகத் தமிழ் மொழி வளர்ந்த பின்னர், அதன் வளர்ச்சியின் உச்சகட்டத்தில் எழுதப்பட்டவைச் சங்கப் பாடல்கள். சங்க காலம் என அறியப்படுவது கி.மு 3 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி 3 ஆம் நூற்றாண்டு. பண்டைய கிரேக்க மற்றும் ரோமானிய வரலாற்று ஆசிரியர்களான பெரிப்பிலஸ் (கி.பி 70), பிளைனி (கி.பி 78), டாலமி (கி.பி 140) ஆகியோர் அன்றைய தமிழக நகரங்களையும், துறைமுகங்களையும் விரிவாக வர்ணித்துள்ளனர்.  இலங்கையை ஆட்சி புரிந்த முதலாம் கயவாகுவும் (கி.பி 173 – கி.பி 195) பதிற்றுப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சேரன் செங்குட்டுவனும் சம காலத்தவர்கள்.  மோரியர்கள் தமிழகத்தின் மீது படையெடுத்த விவரங்கள் சில பாடல்களில் உள்ளன.  மோரியர்களின் ஆட்சிக்காலம் கி. மு. 322 முதல் கி. மு. 185 வரை.  மதுரை அருகில் உள்ள மாங்குளம் என்ற சிற்றூரில் உள்ள இரண்டு குகைகளில் பாண்டிய மன்னன் நெடுஞ்செழியன் பற்றிய குறிப்புகள் உள்ளன. அவை கி. மு 2ம் நூற்றாண்டைச் சார்ந்தவை. திருவண்ணாமலைக்கு அருகே உள்ள ஜம்பைக் குகை ஒன்றில் உள்ள கல்வெட்டில், அக் குகையை அதியமான் நெடுமான் அஞ்சி சமணத் துறவி ஒருவருக்குக் கொடையாகக் கொடுத்ததாகக் குறிக்கப்பட்டுள்ளது.  இந்தக் கல்வெட்டு கி. பி. 1 ம் நூற்றாண்டைச் சார்ந்தது. கரூருக்கு அருகில் உள்ள புகளூரில் உள்ள கல்வெட்டில் சமண முனிவருக்குச் சேர மன்னன் இரும்பொறையின் மகன் பெருங்கடுங்கோவின் மகன் இளங்கடுங்கோ குகையை அளித்ததாகக் கல்வெட்டு உள்ளது. இதன் காலம் கி. பி. 2ம் நூற்றாண்டு.  கேரளாவில் (அன்றைய தமிழ்ச் சேர நாடு) எடகல் என்னுமிடத்தில் சேர மன்னனைப் பற்றிய குறிப்பு உள்ளது. இது கி. பி. மூன்றாம் நூற்றாண்டைச் சார்ந்தது.  கல்வெட்டு விவரங்கள் இந்த நூலிலிருந்து எடுக்கப்பட்டன – Early Tamil Inscriptions – From the Earliest Times to the 6th century A.D., Iravatham Mahadevan, Harvard University Publication.

சங்க இலக்கியமும் பிற திராவிட மொழிகளின் முதல் இலக்கியங்களும்

கன்னட மொழியின் மூத்த இலக்கியம்  சிவகோடி இயற்றிய வட்டாராதநெ.  அதன் காலம் கி.பி 900.  தெலுங்கு மொழியின் மூத்த இலக்கியம் கி.பி 11 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நன்னையாவின் மகாபாரதம். மலையாள மொழியின் மூத்த இலக்கியம் கி.பி 14ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த உண்ணுனீலி சந்தேசம். 

அன்றும் இன்றும்

  • பல்லி நிமித்தம் – பல்லி கத்தினால் செய்தி வரும் என்ற நம்பிக்கை
  • காக்கை கரைந்தால் விருந்தினர் வருவார்கள் என்ற நம்பிக்கை
  • காக்கைக்கு உணவளித்தல்
  • இடது கண் துடித்தால் நன்மை ஏற்படும் என்ற நம்பிக்கை
  • நறுமணப் புகையில் பெண்கள் தங்கள் கூந்தலை உலர்த்துதல்
  • கையில் காப்புக் கயிறு கட்டுதல்
  • மணல் வீடு கட்டி சிறுமியர் விளையாடுதல்
  • குழந்தைக்கு உணவு ஊட்டும் பொழுது, அப்பாவிற்குக் கொஞ்சம், அம்மாவிற்குக் கொஞ்சம், பாப்பாவிற்குக் கொஞ்சம் என்றுக் கூறி ஊட்டும் பழக்கம்
  • நெல்லிக்காயைத் தின்ற பின் தண்ணீரைக் குடித்து அதன் இனிமையைச் சுவைத்தல்

பின் வருவனவற்றைச் சங்க இலக்கியத்தில் காணலாம்

  • தமிழர்களின் வரலாறு – புறநானூறு, பதிற்றுப்பத்து ஆகியவற்றில் மிகுதியாக உள்ளன
  • செவ்வாய், புதன், சுக்கிரன், சனி, வியாழன் ஆகிய கோள்கள் – பல நூல்களில் உள்ளன
  • விண்மீன்கள் கூட்டம், வால்மீன், கிரகணம் – பல நூல்களில் உள்ளன
  • நூற்றுக்கும் மேற்பட்ட மரம், செடி, கொடி மற்றும் மலர்கள் – எல்லா நூல்களிலும் உள்ளன
  • பறவைகள், பூச்சிகள், பாலூட்டும் விலங்குகள் மற்றும் ஊர்வனவை – எல்லா நூல்களிலும் உள்ளன
  • ‘கறி’ என்று இன்று பல நாடுகளில் உபயோகிக்கப்படும் பண்டைய தமிழ்ச் சொல்லின் பொருள் ‘மிளகு’. சங்க இலக்கியத்தில் கறி என்னும் இச் சொல் 22 முறை பயன்படுத்தப்பட்டுள்ளது.  மிளகு என்ற சொல் 4 இடங்களில் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது.  மிளகிற்கு மிரியல் என்ற சொல் 1 முறை பயன்படுத்தப்பட்டுள்ளது.
  • குடவோலை முறைத் தேர்தலும் அரசாங்க அதிகாரிகள் ஓலையை எண்ணுவதற்கு எடுப்பதும் – அகநானூறு 77  
  • யவனர்களுடன் இறக்குமதி ஏற்றுமதி வணிகத் தொடர்புகள் – பல பாடல்கள்
  • யவனர்கள்களை கூலிப்படையாக போரில் ஈடுபடுத்தினான் பாண்டிய மன்னன் நெடுஞ்செழியன் – முல்லைப்பாட்டு 59-61
  • நீர்க் குடுவைக் கடிகாரம் – முல்லைப்பாட்டு 58, அகநானூறு 43
  • உயர்ந்த கலங்கரை விளக்கம் – பெரும்பாணாற்றுப்படை 346-351
  • கடல்வழி ஏற்றுமதி இறக்குமதி செய்ததற்கான சான்றுகள் –  அகநானூறு 149, புறநானூறு 56, பட்டினப்பாலை 116-141
  • வணிகர்களுக்கான பாதுகாப்புடன் கூடிய சுங்கச்சாலை – பெரும்பாணாற்றுப்படை 80-81
  • வணிகத்தின் பொருட்டு வெளிநாட்டவர்கள் காவிரிப்பூம்பட்டினத்தில் வசித்தனர் – பட்டினப்பாலை 213-218
  • அறம் கூறும் அவை (நீதி மன்றம்) – மதுரைக்காஞ்சி 489-492
  • முகில்கள் கடலில் நீரை முகந்த விவரம் – பல பாடல்கள்
  • வளைந்த மண் அணை – அகநானூறு 346
  • ஏழு மாடி கட்டிடம் – முல்லைப்பாட்டு 86
  • கட்டிடக் கலை வல்லுநர்கள் – நெடுநல்வாடை 76
  • உறைக் கிணறுகள் – பட்டினப்பாலை 76
  • போர் மறவர்களுக்கும் மன்னர்களுக்கும், அவர்களுடைய பெயரையையும் பெருமையையும் உளியால் செதுக்கி நடப்பட்ட நடுகல் – பல பாடல்கள்

இலக்கியச் சுவைக்காக சேர்க்கப்பட்டவை:

  • யானை தந்தத்திலிருந்து முத்து உதிரும்.
  • தான் கொன்ற விலங்கு இடது பக்கமாக விழுந்தால் புலி அதை உண்ணாது.
  • பாம்பு ஒளியுடைய மணியைக் கக்கும்.
  • பாம்பை, வானத்தின் இடி, கொடூரமாக இடித்துத் துன்புறுத்தும்.

சங்க இலக்கியம் அகம் புறம் என்ற இரண்டு பிரிவுகளைக் கொண்டது.  அகம் என்றால் ‘உள்’.  புறம் என்றால் ‘வெளி’.  முக்கால்பங்கு பாடல்கள் அகப்பாடல்களாக அமைந்துள்ளன.

தலைவனுக்கும் தலைவிக்கும் இடையே திருமணத்திற்கு முன்பும், திருமணத்தின்போதும், தலைவன் வேறு உறவைக் கொண்டதால் ஏற்படும் பிரிவின்போதும் நடக்கும் நிகழ்வுகளைக் காட்டும் பாடல்கள் இதில் உள்ளன. இதில் மிகுதியான பாடல்கள் தலைவி, தலைவன், தலைவியின் தோழி, தலைவியின் தாய், தலைவியின் செவிலித்தாய் ஆகியவர்களின் கூற்றாக உள்ளன. தலைவனின் நண்பன், தலைவனின் தேரோட்டி, வழிப்போக்கர்கள் ஆகியவர்களின் கூற்றாகச் சிலப்பாடல்கள் உள்ளன.  ஒருவர் இன்னொருவரிடம் கூறும் கூற்றாகவே பாடல்கள் அமைந்துள்ளன.  அக நூலான கலித்தொகையில் மட்டுமே சில பாடல்கள் உரையாடல்களாக அமைந்துள்ளன. பெயர்கள் எதுவும் இப் பாடல்களில் குறிக்கப்படவில்லை.  இங்கு உள்ளுறைகளும் உவமைகளும் மிகுதியாகக் காணப்படும்.  பல பாடல்களில் வரலாற்றுக் குறிப்புகள் உள்ளன.

அகம் அல்லாத பிறவற்றைப் பற்றிக் கூறுவது புறம்.  இதில் வரலாற்றுச் செய்திகள் நிறைய உண்டு.  சேர மன்னர்கள், பாண்டிய மன்னர்கள், சோழ மன்னர்கள், குறுநில மன்னர்கள், தலைவர்கள், போர்கள், பாணர்கள், புலவர்கள், கூத்தர்கள், போர் மறவர்கள், மறப்பெண்கள், ஆகியவர்களைப் பற்றின செய்திகள் உள்ளன.  பெயர்கள் கூறப்பட்டுள்ளன.  மன்னனுக்கு பெண் கொடுக்க மறுத்து அவனோடு போரிடும் குடும்பங்கள் பற்றின பாடல்களும்,  புலவர்கள் தங்களைப் பாணர்களாக பாவித்து பாடும் பாடல்களும் உள்ளன.

எட்டுத்தொகை

நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு என்ற எட்டு நூல்களையும் கீழ்க்கண்ட அடிகளால் நாம் நினைவில் கொள்ளலாம்,

நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு

ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல்

கற்றறிந்தார் ஏத்தும் கலியோடு அகம் புறம் என்று

இத்திறத்த எட்டுத் தொகை”.

நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை, அகநானூறு,  ஆகியவை அக நூல்கள். புறநானூறு, பதிற்றுப்பத்து ஆகியவை புற நூல்கள்.  பரிபாடல் அகமும் புறமும் கொண்ட நூல்.

எட்டுத்தொகை நூல்களைப் பற்றிய விவரங்கள்

1.  நற்றிணை:   இது ஒரு அக நூல். பல புலவர்களால் எழுதப்பட்டது.  இதில் மொத்தம் 400 பாடல்கள் உள்ளன.   இவற்றில் 1 பாடல் முழுமையாக நமக்குக் கிடைக்கவில்லை (234). ஒரு பாடலின் சில பகுதிகள் கிடைக்கவில்லை (285). பாடல்கள்  8 – 13 அடிகள் கொண்டவை. 

2.  குறுந்தொகை:   இது ஒரு அக நூல். பல புலவர்களால் எழுதப்பட்டது.  இதில் மொத்தம் 400 பாடல்கள் உள்ளன.  பாடல்கள் 4 – 8 அடிகள் கொண்டவை. 

3.  ஐங்குறுநூறு:   இது ஒரு அக நூல். ஐந்து புலவர்களால் எழுதப்பட்டது.  இதில் மொத்தம் 500 பாடல்கள் உள்ளன.  குறிஞ்சி, மருதம், முல்லை, நெய்தல், பாலை ஆகிய ஒவ்வொரு திணையிலும் நூறு பாடல்கள் கொண்டது.  ஓரம்போகியார் மருதத் திணைப் பாடல்களையும், அம்மூவனார் நெய்தற் திணைப் பாடல்களையும், கபிலர் குறிஞ்சித் திணைப் பாடல்களையும், ஓதலாந்தையார் பாலைத் திணைப் பாடல்களையும், பேயனார் முல்லைத் திணைப் பாடல்களையும் பாடியுள்ளனர்.  இந்த நூலில் 2 பாடல்கள் நமக்குக் கிடைக்கவில்லை (129,130) .  பாடல்கள் 3 – 6 அடிகள் கொண்டவை.  

4.  பதிற்றுப்பத்து:   இது ஒரு புற நூல். சேர மன்னர்களுக்காக எழுதப்பட்ட நூல். பத்து மன்னர்களுக்காக, ஆளுக்கு 10 பாடல்கள் எழுதப்பட்டன.  ஆனால் 80 பாடல்கள் தான் நமக்குக் கிடைத்துள்ளன.   பாடல்கள் 8-56 அடிகள் கொண்டவை.

5.  பரிபாடல்:   இது அகமும் புறமும் கொண்ட நூல். பல புலவர்களால் எழுதப்பட்டது.  பாடல்கள் முருகனுக்கும், திருமாலுக்கும், வைகை ஆற்றிற்கும் எழுதப்பட்டன. மொத்தம் 70 பாடல்கள் எழுதப்பட்டன.  நமக்குக் கிடைத்தது 22 பாடல்கள்.  பாடல்கள் 32 – 140 அடிகள் கொண்டவை.

6.  கலித்தொகை:   இது ஒரு அக நூல். ஐந்து புலவர்களால் எழுதப்பட்டது.  இதில் மொத்தம் 150 பாடல்கள் உள்ளன.  பாடல்கள் 11 – 80 அடிகள் கொண்டவை.  ஆயர் குடியினரின் ஏறு தழுவுதல் பற்றிய விவரங்கள் இந்த நூலில் மட்டுமே உள்ளன.

7.  அகநானூறு:   இது ஒரு அக நூல். பல புலவர்களால் எழுதப்பட்டது.  இதில் மொத்தம் 400 பாடல்கள் உள்ளன.  பாடல்கள் 13 – 31 அடிகள் கொண்டவை.  மொத்தம் 200 பாடல்கள் பாலைத் திணையிலும்,  80 பாடல்கள் குறிஞ்சித் திணையிலும், 40 பாடல்கள் முல்லைத் திணையிலும், 40 பாடல்கள் நெய்தற் திணையிலும், 40 பாடல்கள் மருதத் திணையிலும் உள்ளன.

8.  புறநானூறு:   இது ஒரு புற நூல். பல புலவர்களால் எழுதப்பட்டது.  இதில் மொத்தம் 400 பாடல்கள் உள்ளன.  பாடல்கள் 4 – 40 அடிகள் கொண்டவை.  மூவேந்தர், குறு நிலமன்னர், பாணர், புலவர், விறலியர், கொடை, மறம், போர் மறவர்கள்,  நாடு, மலை, போர், மறத் தாய்மார்கள், இறந்த மன்னர்களின் புகழைப் பாடுதல், வாழ்க்கையின் நிலையாமை, மன்னர்க்குப் பெண் தர மறுத்தல் என்று பல செய்திகள் இதில் உள்ளன.  மேலும், பரணர், ஔவையார், கோவூர் கிழார், மாங்குடி கிழார் போன்ற பெரும்புலவர்கள், தாங்கள் பாணர்கள் எனத் தோன்றுமாறு பாடும் 32 பாடல்கள் உள்ளன. 

பத்துப்பாட்டு

திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் என்ற பத்து நூல்களையும் கீழ்க்கண்ட  அடிகளால் நாம் நினைவில் கொள்ளலாம்.

முருகு பொருநாறு பாணிரண்டு முல்லை

பெருகு வளமதுரைக் காஞ்சி – மருவினிய

கோலநெடு நல் வாடை கோல் குறிஞ்சி பட்டினப்

பாலை கடாத்தொடும் பத்து.”

இவற்றில் ஐந்து ஆற்றுப்படை நூல்கள்.  ஆற்றுப்படுத்தல் என்றால் ‘வழி காட்டுதல்’ என்று பொருள்.  திருமுருகாற்றுப்படை முருகனை அடையும் வழியைக் காட்டும் நூல்.  மற்ற நான்கு ஆற்றுப்படை நூல்களும் மன்னன் ஒருவனிடம் பரிசு பெற்ற பாணன் இன்னொரு பாணனுக்கு அம்மன்னனிடம் சென்று பரிசு பெரும் முறையை விவரமாகக் கூறுவது.  மன்னர்கள் தமிழை வளர்த்த பாணர்களின் மேல் கொண்ட அன்பையும் மதிப்பையும் நாம் ஆற்றுப்படை நூல்களில் காணலாம். 

கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும்
ஆற்றிடைக் காட்சி உறழத் தோன்றிப்
பெற்ற பெருவளம் பெறார்க்கு அறிவுறீஇச்
சென்று பயன் எதிரச் சொன்ன பக்கமும்  (தொல்காப்பியம், புறத்திணையியல் 29).

1.  திருமுருகாற்றுப்படை (புலவராற்றுப்படை):   இது ஒரு ஆற்றுப்படை நூல்.  317 அடிகளைக் கொண்டது. புலவர் மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரர் முருகனைப்பற்றி எழுதியது. முருகனுடைய அறுபடை வீடுகளைப் பற்றிய செய்திகள் இதில் உள்ளன.  அவை திருப்பரங்குன்றம்,  திருச்சீரலைவாய் (திருச்செந்தூர்), திருவாவினன்குடி (பழனி), திருவேரகம் (சுவாமிமலை), குன்றுதோறாடல் (திருத்தணி), பழமுதிர்சோலை ஆகியவை.  முருகனுடைய 6 முகங்களின் இயல்பு, 12 கைகளின் தொழில் ஆகியவற்றைப் பற்றியும் விவரங்கள் உள்ளன.

2.  பொருநராற்றுப்படை:   இது ஒரு ஆற்றுப்படை நூல்.  248 அடிகளைக் கொண்டது.  புலவர் முடத்தாமக் கண்ணியார் சோழன் கரிகால் பெருவளத்தானுக்காக எழுதியது.  இதில் பாலை யாழ் மிகச் செம்மையாக வருணிக்கப்பட்டுள்ளது.  சோழ மன்னன் கரிகாலன் தன்னை நாடி வந்த பாணனுக்கு நான்கு வெள்ளைக் குதிரைகள் கொண்ட தேரைக் கொடுத்து, ஏழு அடி பின் நடந்து, பாணனைத் தேரில் ஏறக் கூறிச் சிறப்பிப்பதாகக் குறிப்பு உள்ளது.  சோழ நாட்டின் வளமும் காவிரியின் வளமும் விவரிக்கப்பட்டுள்ளன.

3.  சிறுபாணாற்றுப்படைஇது ஒரு ஆற்றுப்படை நூல்.  269 அடிகளைக் கொண்டது.  புலவர் இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் குறுநில மன்னன் ஓய்மான் நாட்டு நல்லியக்கோடனுக்காக எழுதியது.  இந்தப் பாட்டில் சேர நாட்டின் வளம், சோழ நாட்டின் வளம், பாண்டிய நாட்டின் பெருமை, கடையெழு வள்ளல்களின் சிறப்பு யாவும் கூறப்பட்டுள்ளன.  மன்னனை நோக்கிச் செல்லும் வழியில், அவனுடைய நாட்டில் வெவ்வேறு நிலங்களில் வாழ்பவர்கள் பாணர்க்குச் செய்யும் விருந்தோம்பலைப்  பற்றியும் அறிகின்றோம்.

4.  பெரும்பாணாற்றுப்படை:   இது ஒரு ஆற்றுப்படை நூல்.  500 அடிகளைக் கொண்டது.  புலவர் கடியலூர் உருத்திரங் கண்ணனார் குறுநில மன்னன் தொண்டைமான் இளந்திரையனுக்காக எழுதியது. இந்தப் பாட்டில், வழியில் மாட்டு வண்டியில் செல்லும் உப்பு வணிகர், கழுதையின் மேல் பண்டங்களைக் கொண்டு செல்லும் பிற வணிகர், காட்டு மக்களின் வாழ்க்கையும் விருந்தோம்பலும், குறிஞ்சி நிலத்தில் வாழ்வோர் வாழ்க்கை முறை, இடையர் குடியிருப்பு, முல்லை நிலத்தினர் பயணிகளுக்குக் அளிக்கும் உணவு, மருத நிலத்தின் காட்சிகளும் விருந்தோம்பலும், சர்க்கரை ஆலை, மீனவர் குடியிருப்பும் விருந்தோம்பலும், அந்தணர் குடியிருப்பும் விருந்தோம்பலும், கலங்கரை விளக்கம், காஞ்சீபுரத்தின் சிறப்பு, இளந்திரையனின் சிறப்பு, அவனுடைய விருந்தோம்பல் ஆகியவற்றை நாம் காணலாம்.

5.  முல்லைப்பாட்டு:   இது 103 அடிகளைக் கொண்டது.  புலவர் நப்பூதனார் பாண்டிய மன்னன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனுக்காக எழுதியது.  இந்தப் பாட்டில் மன்னனின் பாசறை, அவன் பணியில் உள்ள யவனர், பாசறையில் பணி புரியும் பெண்கள், தண்ணீர் மணி காட்டி, தன் போர் மறவர்களை நினைத்து வருந்தும் மன்னன், மன்னனை நினைத்து ஏங்கும் அவன் மனைவி, ஏழு மாடத்து அரண்மனை, முல்லை நிலத்தின் அழகான வருணனை யாவற்றையும் காணலாம்.

6.  மதுரைக்காஞ்சி:   இது 782 அடிகளைக் கொண்டது.  புலவர் மாங்குடி மருதனார் பாண்டிய மன்னன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனுக்காக எழுதியது.   மதுரை நகரில் உள்ள கடைகள், நிகழ்வுகள் யாவற்றையும் மிகச் சிறப்பாக நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்துகின்றார் மாங்குடி மருதனார்.  இந்த நூலில் நெடுஞ்செழியனின் நால்வகைப் படையின் வலிமை,  அவனது மறமும் சிறப்பும், பாணர்களுக்கு யானைகளையும் பொன்னால் செய்த தாமரை மலர்களை மன்னன் கொடுப்பது, பாண்டிய நாட்டின் மருதம், முல்லை, குறிஞ்சி, பாலை, நெய்தல்  ஆகிய நிலங்களின் சிறப்பு, மதுரை நகரின் கோட்டையும், அகழியும், நாள் அங்காடி, இரவு அங்காடி, பௌத்தப் பள்ளி, சமணப் பள்ளி, அந்தணர் பள்ளி, நீதி மன்றம், இரவின் மூன்று சாமங்களில் நடக்கும் நிகழ்ச்சிகள், மதுரையின் ஒலிகள், தொழில் மாக்கள், மதுரையின் சிறப்பு யாவற்றையும் நாம் காணலாம்.

7.  நெடுநல்வாடை:   இது 188 அடிகளைக் கொண்டது.  புலவர் மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரர் எழுதியது. மன்னனின் பெயர் கிடைக்கவில்லை.  ஆனால் பாண்டிய மன்னன் நெடுஞ்செழியனுக்காக எழுதப்பட்டது என்று சில அறிஞர்கள் கூறுகின்றனர்.  இந்தப் பாட்டில்  நீண்ட குளிர் காலத்தினால் துன்பத்தில் தவிக்கும் இடையர்கள், பறவைகள், குரங்குகள், மற்றும் மாடுகள், மழைக் காலத்தின் செழிப்பு, மாலை நேரத்தில் விளக்கு ஏற்றி வழிபடும் பெண்கள், அரண்மனையைக் கட்டும் வல்லுநர், அரண்மனையின் அமைப்பு, அந்தப்புரத்தின் அமைப்பு, அரசியின் அழகிய வேலைப்பாடு அமைந்த கட்டில், அரசி கணவனை நினைத்து வருந்தும் நிலைமை, பாசறையில் மன்னனின் நிலைமை யாவற்றையும்  காணலாம்.

8.  குறிஞ்சிப்பாட்டு:   இது 261 அடிகளைக் கொண்டது.  புலவர் கபிலர் ஆரிய மன்னன் பிரகதத்தனுக்குத் தமிழரின் களவு முறைத் திருமணத்தை இந்தப் பாடல் மூலம் விவரிக்கின்றார்.   தோழி தலைவிக்கும் தலைவனுக்கும் இடையே ஏற்பட்ட காதல் பற்றி தலைவியின் தாயிடமும் செவிலித் தாயிடமும் கூறி, திருமணம் வேண்டுவதை ‘அறத்தோடு நிற்றல்’ என்று தமிழ்ச் சான்றோர் கூறினர்.   இந்தப் பாட்டில் தோழி ஒருத்தி தலைவியின் தாயிடம், தலைவி தலைவனை தினைப் புனத்தில் எவ்வாறுச் சந்தித்தாள், காட்டு யானையிடமிருந்து தலைவன் அவர்களை எவ்வாறுக் காப்பாற்றினான்,  தலைவனுக்கும் தலைவிக்கும் இடையே எவ்வாறு அன்பு ஏற்பட்டது,  தலைவன் எவ்வாறு திருமணத்தை நாடுகின்றான், தலைவன் கொடூரமான வழியில் இரவில் தனியே வருவதால் அவனுக்குத் துன்பம் நேரிடும் என்று தலைவி வருந்துகின்றாள், என்றெல்லாம் விவரமாகக் கூறுகின்றாள்.  கண்கள் சிவக்க அருவியில் குளித்து விட்டு 99 மலர்களால் தலைவியும் தோழியும் தங்களை ஒப்பனை செய்யும் காட்சி சிறப்புடையது. 

9.  பட்டினப்பாலை:   இது 301 அடிகளைக் கொண்டது.   புலவர் கடியலூர் உருத்திரங்கண்ணனார் சோழன் கரிகால் பெருவளத்தானுக்காக எழுதியது.  காவிரிப்பூம்பட்டினத்தைப் பற்றிய விவரங்கள் நிறைந்த நூல் இது.  இந்தப்பாட்டில் சோழ நாட்டின் வளமை, காவிரிப்பூம்பட்டினத்தின் சிறப்பு, முனிவர்கள் வாழும் தவப் பள்ளிகள், மறவர்களின் விளையாட்டுக் களம், பரதவர் இருப்பிடம், காவிரிப்பூம்பட்டினத்தின் இரவு நிகழ்ச்சிகள், வரி வசூலிப்பவர்கள், ஏற்றுமதி, இறக்குமதி, மாளிகைகள், பல்வேறு கொடிகள், உழவர், வணிகர் ஆகியோர் பற்றிய விவரங்கள், ஊரின் செல்வம், கரிகாலனின் போர்த் திறமை, யாவற்றையும் நாம் காணலாம்.

10.  மலைப்படுகடாம் (கூத்தராற்றுப்படை):   இது ஒரு ஆற்றுப்படை நூல்.  583 அடிகளைக் கொண்டது.  புலவர் இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கெளசிகனார் குறுநில மன்னன் நன்னன் வேண்மானுக்காக எழுதியது.   இந்தப்பாட்டில் பாணர் குடும்பம் பல்வேறு இசைக் கருவிகளை சுருக்குப் பைகளில் கட்டிக் கொண்டு செல்வது, நன்னனின் சிறப்பு, நவிர மலையின் தன்மை, வழியில் உள்ள நல்லதும் பொல்லாததும், கானவர் குடியும் விருந்தோம்பலும், நன்னனின் மலை நாட்டுச் செல்வம், இரவில் பயணம் கூடாது என்ற அறிவுரை, கவணிடமிருந்து தப்புதல், வழுக்கி விழாமல் வழியில் செல்லுதல், இறைவனைத் தொழுது செல்லுதல், இரவில் குகையில் தங்குதல், மலைப் பாம்பிடமிருந்து தப்பித்தல், மலை மக்களின் விருந்தோம்பல்,  மலையின் ஒலிகள், வழியில் காணும் கோட்டைகளும் நடுகற்களும், உதவும் மறவோர், சிற்றூரின் விருந்தோம்பல், உழவர்களின் உதவி, நன்னனின் அரண்மனை, நன்னனின் கொடைத் தன்மை யாவற்றையும் நாம் காணலாம்.